Wednesday 10 August 2016

சித்தர்கள் அருளிய சோதி+இடம்: சோதிடம்




சித்தர்கள் அருளிய சோதி+இடம்: சோதிடம்
https://www.facebook.com/groups/siddhar.science

அண்டவெளியில் சுழன்று கொண்டிருக்கும் நவகிரகங்களின் ஒளிச்சிதறல்களின் தாக்கத்தால் பூவுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை வெளிச்சம் காட்டி உலகத்தோர்களுக்கு வழிகாட்டும் தெய்வீக சாத்திரம் "சோதிடம்" எனப்படும்.

சோதி+இடம் = சோதிடம். இருள் சூழ்ந்துள்ள ஒரு அறையில் சோதிமயமான ஒரு விளக்கை ஏற்றினால், அந்த அறையின் முழு ரகசியங்களும் எப்படி தெள்ளந்தெளிவாகக்காட்சி கொடுக்கின்றதோ அவ்வாறாகவே வாழ்க்கை என்னும் அறையில் சோதிமயமான ஞானவிளக்கை ஏற்றிப்பார்த்தால் வாழ்க்கையின் முழு ரகசியங்களும் மிகத்தெளிவாகக்காட்சி கொடுக்கும். ஊழ்வினையை அடிப்படையாகக்கொண்டு உலக உயிர்கள் அடையக்கூடிய வாழ்க்கையின் முக்கால ரகசியங்களை விளக்கி வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருநூல் சோதிடம் எனப்படும்.

வேத சோதிடம் அறிமுகம்

உலகில் வாழும் உயிர்களுக்கு வழிகாட்டும் தேவரகசியங்கள் அடங்கிய குருநூல் வேதம் எனப்படும். உலகத்தின் முழு முதற்கடவுளான பரம்பொருளை அடிப்படையாகக்கொண்டு; பரம் பொருளால் இவ்வுலகை ஆள்வதற்காக நியமிக்கப்பட்ட நவகிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய பிரதான கிரகங்கள் மற்றும் அதன் பண்புகள்; நவகிரகங்களின் உள்ளாதிக்கத்திற்குட்பட்ட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மற்றும் ராசி மண்டலத்தின் பன்னிரண்டு ராசிகள் மற்றும் அவைகளின் பண்புகள்; காலக்கணக்கீடுகளை நிர்ணயம் செய்யும் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள், திதிகள் மற்றும் கரணங்கள் மற்றும் அவைகளின் பண்புகள் வரையிலான ஆதிக்கச்சக்திகளால் இவ்வுலகத்தில் வாழும் உயிர்களுக்கு எற்படும் முக்கால (கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) நிகழ்வுகளை நூல் வழியிலும், யுக்தியின் வழியிலும், ஞானத்தின் வழியிலும் உணர்ந்து உலகத்திற்கு பலன்களை உணர்த்தி வழிகாட்டும் குரு உபதேசம் "வேத சோதிடம்" எனப்படும்.

இந்து சோதிடம் (எ) இந்திய சோதிடம்

இந்து என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரன் என்றால் தாய் என்று பொருள். எனவே, இந்து மதம் உலகத்தின் தாய் மதமாகும். எனவே, இந்து சோதிட சாஸ்திரமானது இவ்வுலகில் வாழும் பிற சோதிட சாஸ்திரங்களுக்கெல்லாம் தாய் சோதிட சாஸ்திரமாகும். ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு எப்படி கபடமில்லாமல் உலக ரகசியங்களை தன் குழந்தைக்கு அன்போடு உபதேசிப்பாளோ அவ்வாறு முழுமையாக உபதேசிக்கும் சோதிடம் இந்து சோதிடம் எனப்படும். வேதசோதிடம் இந்து மதத்தை அடிப்படையாகக்கொண்டதால் இதற்கு இந்து சோதிடம் என்று மற்றொரு பெயரும் வழங்கலாயிற்று. ஊழ் வினையின் பயனாக விளையும் வாழ்க்கைப்பயிரில் ஏற்படும் களைகளைக்களைந்து வாழ்க்கைப்பயிர் செம்மையாக வளர்ந்து ஓங்க வழிகாட்டும் குரு உபதேசம் இந்து சோதிடம் எனப்படும்.

இந்துமதத்தை அடிப்படையாகக்கொண்ட பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளை அடிப்படையாகக்கொண்ட தேவகுடும்பத்தினர்களின் அருளால் இவ்வுலக உயிர்களின் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகள் மற்றும் தீமைகளைக்களையும் பரிகார மார்க்கங்களாகிய தேவதாபிரதிட்டைகள் மற்றும் தேவதா வழிபாடு போன்ற தெய்வீக முறைகளை முழுமையாக விளக்கும் வேத சோதிடமே இந்து சோதிடம் எனப்படும். இந்து சோதிடமானது இந்தியாவில் பிறந்த சோதிட சாஸ்திரமாகையால் இதற்கு இந்திய சோதிடம் என்றொரு பெயரும் வழங்கலாயிற்று.

நாடி சோதிடம்

நாடி வரும் ஆன்மாவிற்கு உபதேசிக்கப்படும் வாழ்க்கைப்பலன்கள் நாடி சோதிடம் எனப்படும். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிரதான சுவாச நிலைகள் இருவகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது, அவைகள் இடகலை (சூரியகலை) மற்றும் பிங்கலை (சந்திரகலை) எனப்படும். இடகலை என்பது வலது நாசியின் வழியாகக்கொள்ளும் சுவாசத்தைக்குறிப்பதாகும். பிங்கலை என்பது இடது நாசியின் வழியாகக்கொள்ளும் சுவாசத்தைக்குறிப்பதாகும். மேற்கண்ட இரண்டு சுவாசக்கலைகளோடு மூன்றாவதாக ஒரே நேரத்தில் வலது மற்றும் இடது நாசிகளின் வழியாக சுவாசக்கலை நடத்துதல் சுழிமுனை எனப்படும். முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள் மற்றும் யோகிகள் மூன்றாம் கலையான சுழிமுனைக்கலையை நடத்தி உயிர் வாழ்பவர்களாவார்கள்.

சுழிமுனைக்கலையை நடத்துபவர்களுக்கு முக்கால ஞானத்தைப்பெறும் சித்தி ஏற்படும். சுழிமுனை நாடியை அடிப்படையாகக்கொண்டு அதன் உட்பிரிவுகளாகிய ஏழு சுவாசக்கலைகளையும் வெவ்வேறு சதவீத நிலைகளில் நடத்தலாம். சப்த நாடிக்கலைகளாவது அத்தி, அலம்புடை, காந்தாரி, சங்கினி, சிங்குவை, புருடன் மற்றும் குரு ஆகிய உட்பிரிவுக்கலைகளாகும். முனிவர்கள் தாங்கள் சுவாசிக்கும் பிரதான மற்றும் உட்பிரிவு நாடிக்கலைகளின் வழியாக அவர்களிடம் நாடி வரும் ஆன்மாக்களின் நல்வினை மற்றும் தீவினைப்பலன்களை ஞானத்தில் உணர்த்து உலகத்திற்கு உணர்த்துவார்கள். எனவே, சப்த நாடிகளின் ரகசிய பிம்பங்களை ஆதாரமாகக்கொண்டு நவகிரகங்களின் சூட்சும ரகசியங்களோடு ஒப்பிட்டு உலகிற்கு அளிக்கும் சோதிட உபதேசம் நாடி சோதிடமாகும்.

நாடி சோதிடம் உயர்வுகள்

நாடி சோதிடம் பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களாக இவ்வுலக ஆன்மாக்களுக்கு உபதேசிக்கப்பட்டு வருகின்றது. அண்டசராசரங்களுக்கும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு கோரக்கருக்கு உபதேசம் செய்த நாடி நூல் உலகப்பிரசித்தி பெற்றதாகும். தேவேந்திரனால் நடத்தப்படும் தேவசபையையே காகபுஜண்டர் நாடி சோதிடமே நிர்ணயம் செய்கின்றது. நாடி சோதிடம் மூலம் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களின் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் ஒரு மனிதனை சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் வழிகாட்டும் குரு நூல் நாடி சோதிடமாகும். மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை உரைக்கும் நாடி நூல் அந்த தனிப்பட்ட மனிதனின் உயிர் ரேகைகளான நவரேகைகளிலொன்றை மையமாகக்கொண்டு சுழிமுனை நாடியை மையமாகக்கொண்ட நவ நாடிகளில் ஒரு நாடியால் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகத்தைப்பற்றிய பிற சூட்ம ரகசியங்கள் சுழிமுனை நாடியை மையமாகக்கொண்ட நவ நாடிகளில் ஒரு நாடியாலும் கால நிலையை மையமாகக்கொண்டும் நிர்ணயம் செய்யப்படுகின்றது.

வேத சோதிடமானது ஒரு தனிப்பட்ட மனிதனின் (சோதிடரின்) சோதிடக்கல்வி, யுக்தி மற்றும் ஞானத்தால் நிர்ணயம் செய்யப்படுவதால் பலன்களின் நடைமுறைகளில் பிறழ்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாலும்; வேத சோதிடர் பலன்களை நிர்ணயிக்கும் பொழுது அவரின் ஊழ்வினை அவரை கட்டுப்படுத்துவதாலும் வேத சோதிடப்பலன்கள் முழுமையான பலன்களை இவ்வுலகிற்கு அளிப்பது மிகக்கடினமான ஒன்றாக இருப்பதால் ஊழ்வினைக்குக்கட்டுப்படாத முனிவர்களால் நிர்ணயிக்கப்படும் நாடி சோதிடப்பலன்கள் உயிருள்ள பலன்களாகும். வேதசோதிடப்பலன்களின் மூலநூல் உரைநடை வழியைக்கொண்டுள்ளதால் பலன்களின் உயிர் தன்மை முழுமைப்படுத்தப்படுவதில் சிரமங்கள் இருக்கின்றது. உயர்வான ஊழ்வினைகளைச்சுமக்கும் தர்மசிந்தனைக்கொண்ட வேத சோதிடரால் மட்டுமே உயிருள்ள சோதிடப்பலன்களை இவ்வுலகத்திற்கு கொடுக்கமுடியுமென்பதால் இத்தகைய நிலைகொண்டவர்கள் ஒரு சிலர்கள் மட்டுமே இப்புவியில் வாழ்வதால் வேத சோதிடத்தின் பலன்கள் முழுமை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன.

நாடி சோதிடத்தின் மூல நூல் செய்யுள் வடிவத்தைக்கொண்டதாகும், "தமிழ்" ஒரு உயிருள்ள மொழியாகும், எனவே தமிழில் உயிர் எழுத்துக்கள் என்றும்; உடல்(மெய்) எழுத்துக்கள் என்றும்; உயிருடல் எழுத்துக்கள் (உயிர்மெய்யெழுத்துக்கள்) என்றும்; மேற்கண்ட அனைத்தையும் இயக்கும் ஆயுத எழுத்து ஒன்றுமாக தமிழ்மொழி வடிவமைக்கப்பட்டுள்ளதாலும்; மேற்கண்ட நான்கு பிரிவுகள் மட்டுமல்லாமல் தேவரகசியமாக ஐந்தாவது பிரிவான ஆண் எழுத்துக்கள் மற்றும் பெண் எழுத்துக்கள் என்னும் சூட்சுமப்பிரிவு தமிழ்மொழியில் உள்ளதால் ஆண் எழுத்துக்களையும் பெண் எழுத்துக்களையும் சமமான ஆற்றலோடு பாடல் வகையில் பிணைத்து பலன்களை முறைப்படுத்தி பாடல் வடிவில் பலன்களை இவ்வுலகத்திற்குச்சொல்கின்றபடியினால் எவ்வாறு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சமமாக முழுமையாக புணர்ச்சி செய்தால் அதன் விளைவாக ஒரு முழுமையான உயிர்ப்பொருள் இவ்வுலகத்தில் படைக்கப்படுமோ அவ்வாறே முழுமையான நிலையுடன் நாடி சோதிடப்பலன்கள் "அறம்பாடல்" என்னும் சூட்சுமக்கயிற்றால் பிணைக்கப்பட்டு வெளியிடப்படுவதால் உலகத்தில் வாழும் அனைத்து சோதிட சாஸ்திரத்தினும் உயர்வுள்ளதாய் "தாய்" சாஸ்திரமாக நாடி சோதிட சாஸ்திரம் விளங்குகின்றது.

பல ஆண்டுகளுக்கு முன் அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு கோரக்கருக்கு உலகத்தின் பல்வேறு ரகசியங்களைப்பற்றி போதித்து வருகையில் அருள்குரு கோரக்கர் தன்னுடைய குருவாகிய காகபுஜண்டரிடத்திலே இவ்வுலக மானிடர்களின் வாழ்க்கை நிலைகளைப்பற்றிய சூட்சுமங்களைத்தெரிவிக்கவேண்டும் என்று கேட்டபடியினால் அருள்குரு காகபுஜண்டரும் அதற்கு இணங்கி இந்திந்த காலத்தில் இன்ன வயது கொண்ட இன்ன பிறப்பு விவரங்களைக்கொண்ட இந்த மானிடர் நாடி நூல் சுருதியை வேண்டிக்கேட்பார், அப்பொழுது அந்த மானிடருக்கு இன்னன்ன பலன்கள் நடக்கும் என்று பாடல் வடிவில் தன் சீடரிடத்திலே திருவாய் மலர்ந்தருளினார். அருள்குரு காகபுஜண்டரால் திருவாய் மலர்ந்தருளப்பெற்ற தேவரகசியங்களை ஓலைச் சுவடியில் எழுதி அருள்குரு கோரக்கர் தன்னுடைய ரகசியப்பேழையில் வைத்து அவரின் ரகசிய இடமாகிய கொல்லிமலை கோரக்கர் குண்டத்தில் வைத்து பாதுகாத்து வைத்தார். அருள்குரு காகபுஜண்டர் மற்றும் அருள்குரு கோரக்கரின் குருவருளால் மேற்படி குருமார்களின் கலியுக வாரிசான பாஸ்கரன் குருஜி அவர்களுக்கு புதையலாக கோரக்கரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கிடைக்கப்பெற்று இவ்வுலகோருக்கு குருவருள் ஆணைப்படி விரித்துரைக்கப்படுகின்றது. எனவே, முனிவர்களால் நேரிடையாக வழங்கப்படுகின்ற நாடி சோதிட சாஸ்திரம் பிற சோதிட சாஸ்திரத்தினும் தலையானதாகும்.

நாடி சோதிடம் சாந்தி பரிகாரங்கள்

ஒரு மனிதன் இவ்வுலகில் பிறக்கும் பொழுது அவனது ஆன்மா வினைகளை மட்டுமே சுமந்துகொண்டு வருகின்றது. பல்வேறு விதமான நல்வினைகளையும் தீவினைகளையும் சுமந்துகொண்டு சூட்சுமரகசியங்களுடன் ஆன்மா இவ்வுலகில் பிறப்பு எடுக்கின்றது. ஒரு ஆன்மா முற்பிறவிகளில் பெற்ற நல்வினைகளின் அடிப்படையில் உயர்வான நற்பலன்களையும் அவ்வாறாகவே முற்பிறவிகளில் பெற்ற தீவினைகளின் அடிப்படையில் தாழ்வான தீயபலன்களையும் இவ்வுலகில் அனுபவிக்கின்றது. எனவே, ஒரு ஆன்மாவிற்கு ஏற்படும் நன்மையும் தீமையும் அவ்வான்மாவாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, ஒரு உயர்ந்த ஆன்மாவின் நோக்கம் தீவினைகளை செய்யாமல் நல்வினைகளை செய்வதேயாகும். மாயத்திரையினால் முற்பிறப்பு ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் மானிடருக்கு தான் அனுபவிக்கும் நன்மை தீமைகளுக்குண்டான காரணங்கள் தெரிவதில்லை. எந்த ஒரு ஆன்மா, வினையின் உண்மை சூட்சுமத்தை உணர்ந்து தர்மத்தின் வழியே வாழ்க்கையை நடத்துகின்றதோ அந்த ஆன்மா எல்லா உயர்வுகளையும் பெறும் என்பது திண்ணம்.

நாம், நிலத்தில் என்ன விதைக்கின்றோமோ அவைதான் பயிராகச்செழித்து வளர்ந்து அறுவடையைக்கொடுக்கும். அவ்வாறாகவே நாம் எத்தகைய வினையை விதைக்கின்றோமோ அதற்குண்டான அறுவடையைத்தான் நாம் பெறமுடியும். ஆகவே, உலகத்தின் இயற்கை விதிகளின்படி வினைகளின் அடிப்படையில் இவ்வுலகை இறைவன் ஆட்சி செய்து கொண்டிருகின்றான்.

"வினைக்கு வினை" என்கிற தத்துவத்தின் அடிப்படையில் நாம் நல்வினைகளை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நம் வாழ்வில் நன்மைகளைப்பெறமுடியும். தீவினைகளை தீர்த்துக்கொள்ள மூன்று உயர்வான மார்க்கங்கள் சொல்லப்பட்டுள்ளது.

சாந்தி பரிகாரம் முதல்வழி

முதல் வழிமுறைப்படி குருநூலின் வழியில் நாம் என்ன துன்பங்களைப்பெற்றிருக்கின்றோமோ அதற்குண்டான நேரெதிர் நல்வினைகளைச்செய்வதின் மூலம் நம் துன்பங்களை இன்பங்களாக மாற்றிக்கொள்ளலாம்.

உதாரணமாக நீண்டநாட்களாக திருமணமாகாமல் ஒருவர் தீவினைகளின் வீரியத்தால் துன்பப்படுகின்றார் எனின், அவர் ஒரு ஏழைத்தம்பதியினருக்கு இலவசத்திருமணம் செய்து வைத்து இறைவனை வழிபட்டால் அவ்வினைக்கு எதிர்வினையாக உடனடியாகத்திருமணம் கண்டு இன்பம் பெறலாம்.

சாந்தி பரிகாரம் இரண்டாம் வழி

இரண்டாம் வழிமுறைப்படி பலபேருக்கு தர்ம சிந்தனையை ஊட்டுகின்ற தேவாலய பிரதிட்டை மூலமும் வினையை போக்கிக்கொள்ள முடியும்.

உதாரணமாக சர்பதோடத்தின் விளைவாக திருமணத்தடை ஏற்பட்டால் அரிச்சந்திரன் திருக்கோயில் ஏற்படுத்தி திருக்குட நன்னீராட்டு விழா செய்தால் வினைகள் தீர்ந்து திருமணம் நடக்கும். திருக்கோயில் அமைப்பதின் மூலமாக பல பேர்களின் வினைகளும் தீர்வதற்கு வழி அமைவதால் இரண்டாம் நிலை வழிமுறை மிகவும் உயர்ந்ததாகும்.

அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சாந்தி காண்ட நூலின் வழியாக தேவாலயத்திருப் பணிகள் மூலம் தீவினைகளை நீக்கி நல்வினைகளை பெருக்கிக்கொள்ளும் தேவரகசிய மார்க்கங்கள் பலவற்றை உணர்த்திக்கொண்டிருக்கின்றார். எனவே, குருவின் பொன்னான வார்த்தைகளைக்கேட்டு சாந்தி காண்டப்படி ஒழுகி நடந்தால் உயர்வான மாற்றங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஏற்பட்டு மனதில் தர்ம சிந்தனைகள் ஓங்கி எதிர்காலத்தில் தீவினைகள் செய்யாமலிருக்க ஆன்மா வழிவகுக்கும்.

சாந்தி பரிகாரம் மூன்றாம் வழி

மூன்றாம் வழிமுறைப்படி மனதுருகி இறைவனை ஆத்மார்த்தமாக உரிய மூலமந்திரங்களை செபித்து தினமும் தர்மசிந்தனையுடன் வழிபாடு செய்வதின் மூலமாகவும் வினையை படிப்படியாகக்குறைக்கலாம். இத்தகைய மூன்றாம் வழி முறை பக்தி மார்க்கமான படியினால் உண்மையான பக்தியின் மூலமும் தர்ம ஒழுக்கத்தின் மூலமும் இம்முறையில் வினைகளைத்தீர்த்துக்கொள்ள முடியும். பொய்யான பக்தியும், கபட்டுச்சிந்தனையும் இந்த முறையை பின்பற்றுபவர்களுக்கு நல்வினைகளை அளிப்பதற்கு பதிலாக தீவினைகளையே அளிக்கும்.
https://www.facebook.com/groups/siddhar.science

எனவே, மேற்கண்ட முன்று வழிமுறைகளும் முறையாகப்பின்பற்றப்பட்டால் அவைகள் ஆன்மாக்களுக்கு நிறைந்த நற்பலன்களை நிச்சயம் கொடுக்கும் என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கருக்கு உபதேசிக்கின்றார்.

பரிகாரம் செய்வதின் பலன்கள் ஒரு சில ஆன்மாக்களுக்கு ஒரு சில நாட்களிலும்; ஒரு சில ஆன்மாக்களுக்கு ஒரு சில மாதங்களுக்குள்ளும்: ஒரு சில ஆன்மாக்களுக்கு ஒரு சில ஆண்டுகளுக்குள்ளும் வினையின் வீரியத்தை அடிப்படையாகக்கொண்டும்; செய்யும் பரிகாரத்தை மதித்தொழுகும் வினையை அடிப்படையாகக்கொண்டும்; பரிகாரம் செய்த பின் ஒழுகும் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டும் திண்ணமாகக்கிடைக்கும்.

ஊழ்வினையிலேயே பரிகாரம் செய்வதற்குண்டான உள்ளூழ் இருப்பவர்கள் மட்டுமே பரிகாரம் மூலம் ஊழ்வினையை நீக்கமுடியும், மற்றவர்களால் ஊழ்வினையைப்பற்றி அறிந்து கொள்ளவும் முடியாது அதை நீக்கவும் முடியாது. குருமுகாந்திரமாக முறையாகப்பரிகாரம் செய்தால் நிச்சயம் தீவினைகள் நீங்கி நல்வினைகள் விளையும் என்பது உறுதி.

நாடி சோதிடம் தீட்சை பரிகாரங்கள்

தீட்சை என்றால் ஞான உபதேசம் என்பது பொருள். ஞான உபதேசம் இரண்டு வகைப்படும். முதல் நிலை ஞான உபதேசம் ஒரு மனிதன் வினைகள் நீங்கி பூரண ஞானம் பெற்று பிறவியில்லா நிலையாகிய முக்தியை அடையும் மார்க்கத்தினைச்சொல்வதாகும். இம்முறை உபதேசம் ஞானகாண்டம் வாயிலாக குருவருளால் உபதேசிக்கப்படும்.

இரண்டாம் நிலை ஞான உபதேசம் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தெய்வீக மந்திர ஆற்றல்களின் மூலமாக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து மீண்டு நலமுடன் வாழ்வதற்குண்டான மந்திர மார்க்கத்தினைச்சொல்வதாகும். இந்த இரண்டாம் நிலை வழிமுறைகள்தான் தீட்சைப்பரிகாரங்கள் எனப்படும்.

நவகிரங்களின் கதிர்வீச்சினால் மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களை தெய்வீக பலத்தால் குறைத்துக்கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகள் தீட்சைப்பரிகாரங்கள் மூலம் சொல்லப்படும். எந்த தெய்வத்தை வழிபாடு செய்யவேண்டும்; என்ன மந்திரங்கள் செபித்து வழிபாடு செய்யப்படவேண்டும்; எத்தகைய முறைகளில் வழிபாடு செய்யப்படவேண்டும்; எத்தகைய மந்திரங்களின் ஆற்றல்கள் சேமிக்கப்பட்ட ரட்சைகளை (யந்திரங்களை) அணிந்து கொள்ள வேண்டும்; மந்திரங்களின் ஆற்றல்கள் யார் மூலம் சேமிக்கப்பட்டு கொடுக்கப்படவேண்டும்; ரட்சைகள்(யந்திரங்கள்) எந்த உலோகத்தால் செய்யப்படவேண்டும்; ரட்சைகளின் (யந்திரங்களின்) அளவுகள் என்ன?; ரட்சைகள்(யந்திரங்கள்) எந்த காலத்தில் அணியப்படவேண்டும்; ரட்சைகள் உடலின் எந்த பாகத்தில் அணியப்படவேண்டும்?; எத்தகைய சூட்சும விதிப்படி யந்திரங்கள் எழுதப்பட்டு மந்திர ஆற்றல் சேமிக்கப்படவேண்டும்; எப்படி குருபாகம் என்னும் குரு தீட்சையால் ரட்சை மற்றும் எந்திரங்கள் முழுமை படுத்தப்படவேண்டும் போன்ற முறைகளைக்கையாண்டு இறையருளாலும் குருவருளாலும் வாழ்க்கையின் துன்பத்தைக் குறைத்துக்கொள்ள வழிவகை செய்யும் பரிகாரமே தீட்சைப்பரிகாரம் எனப்படும். தீட்சைப்பரிகாரங்கள் துன்பத்தைக்கட்டுப்படுத்தப்பயன்படும் தற்காலிக தெய்வீக மார்க்கமாகும்.

நாடி சோதிடம் ஆகம சாஸ்திரம்

தமிழ் எழுத்துக்களெல்லாம் எப்படி "அகரம் " எனப்படும் "அ" என்கிற உயிரெழுத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்றதோ அவ்வாறாகவே இவ்வுலகம் ஆதிமுதற்கடவுளாக விளங்கக்கூடிய ஆதிசிவனை அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்றது. ஆதிசிவனை பிரதம அமைச்சராகக்கொண்டு பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவன் என்னும் மும்மூர்த்திகளும் மூன்று பிரதான தொழில்களை செய்யும் பொறுப்பேற்று இவ்வுலகை ஆள்கின்றார்கள். மும்மூர்த்திகளுக்குக்கீழாய் மிகப்பரந்து விரிந்துள்ள தேவ குடும்பம் இவ்வுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.

பரமாத்மாவான இறைவன் எப்படி தன் சொரூபமாக இவ்வுலகத்தில் பல்வேறு விதமான சீவாத்மாக்களைப்படைத்து அவற்றுள் பல்வேறு விதமான வேற்றுமைகளையும் படைத்து ஆனாலும் அவற்றினுள்ளும் ஒரு விதமான ஒற்றுமையையும் படைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றானோ அவ்வாறாகவே பரமாத்மாவான இறைவன் பல்வேறு விதமான தேவர்களையும் படைத்து அவர்களுக்குள் பல்வேறு விதமான வேற்றுமைகளையும் படைத்து ஆனாலும் அவர்களுக்குள்ளும் ஒரு விதமான ஒற்றுமையையும் படைத்து இவ்வுலகை ஆள அவர்களுக்கும் பங்களித்து மேன்மையாக இவ்வுலகை ஆண்டு கொண்டிருக்கின்றான்.

பலகோடி யுகங்களையும் பலகோடி கற்பகாலங்களையும் கடந்த இவ்வுலகில் இறைவன் பலகோடி தேவர்களையும் படைத்து அவர்களுக்கும் இவ்வுலக ஆட்சியில் பங்களித்து இவ்வுலகை ஆண்டு கொண்டிருக்கின்றான். பலகோடி ஆண்டுகள் வயதுடைய இவ்வுலகம் பலகோடி விதமான ஆகம சாத்திரமுறைகளையும் (தேவாலய நிர்மாண விதிகள்); தேவ பிரதிட்டை முறைகளையும் (தெய்வச்சிலைகளின் நிர்மாண விதிகள்); வழிபாடு முறைகளையும் அதன் பலன்களையும் பெற்றிருக்கின்றது. எனவே, ஆதிசிவ தேவகுடும்பம் மிகப்பெரிய ஒன்றாகும்.

காலதேசவர்த்தமானத்தால் தற்காலம் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் தான் ஆகமசாத்திரமுறைகளும் (தேவாலய நிர்மாண விதிகள்); தேவபிரதிட்டை முறைகளும் (தெய்வச்சிலைகளின் நிர்மாண விதிகள்);தேவாலய உருவ நிர்ணய முறைகளும்; வழிபாட்டு முறைகளும் அதன் பலன்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆதிபரம்பொருளின் அடிப்படை விதிகளின்படி உலகில் எப்பொருளும் அழிவதில்லையாதலால் தற்காலம் நடைமுறையில் இல்லாத பல கோடி விதமான ஆகம சாத்திரமுறைகளும்(தேவாலய நிர்மாண விதிகள்) தற்காலத்திலும் ஞானக்கல்வி ரூபத்தில் வெவ்வேறு விதமான பலகோடி ஆன்மாக்களின் சிந்தனைகளில் அழியாத கல்வியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. கனவு முகாந்திரமாகவும், நினைவு முகாந்திரமாகவும், குருநூல் முகாந்திரமாகவும் பலகோடி ஆன்மாக்களுக்கும் பல்வேறு விதமான தெய்வீகக்கல்விகள் இறைவனால் கொடுக்கப்பட்ட போதிலும் அவைகளை ஒன்று சேர்த்து உலகத்தில் பயன்படுத்தி உயர்வுசேர்க்க ஊழ்வினை தடை செய்வதால் பலகோடி தேவரகசியங்கள் இவ்வுலகில் முடங்கி மறைந்து கிடக்கின்றன. மேன்மையான தவத்தாலும்; தர்ம வாழ்வினாலும்; பரிபூரண குருகடாட்சத்தினாலும் பலகோடி தேவரகசியக்கல்வியை எந்த ஆன்மாவும் ஊழ்வினை வழிவகுத்தால் அறிந்துகொள்ளலாம்.

அண்டசராசரங்களுக்கும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய ஸ்ரீபகுளாதேவி உடனுறை காகபுஜண்ட முனிவர் கற்பகவிருட்ச சிரஞ்சீவிச்சித்தர் ஆதலால் அவர்தம் நாடிநூல் வழியாக ஆயிரத்தெட்டு வகையான சிவாலய, பிரம்மாலய மற்றும் விஷ்ணாலய அமைப்பு முறைகளை இவ்வுலகத்திற்கு உபதேசித்துள்ளார். தேவாலயம் கட்ட விருப்பம் உள்ளவர்கள் குருவை அணுகி நாடிநூல் மூலம் ஆகம விளக்கங்களைப்பெற்று ஆலயம் அமைத்து வழிபட்டால் இவ்வுலகில் பல இன்பங்கள் கற்பகவிருட்சமாய் வளரும் என்பது திண்ணமான உண்மை.

முற்பிறவிகளில் செய்த தீவினைகளின் விளைவாக இவ்வுலக வாழ்க்கையில் மானிடர்கள் அடையும் துயரங்களை நீக்குவதற்குண்டான பரிகாரமார்க்கங்களும் இலவச பிரசன்ன பிரச்சனை காண்டத்தில் இடம் பெறுகின்றது. பல ஆயிரம் ஓலைச்சுவடிகளின் விவரங்கள் கணிப்பொறியில் ஏற்றப்பட்டு பல ஆண்டுகளாகக்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்த இலவச சேவை நேரிடையாக அளிக்கப்படுகின்றது. அருள்நாட்டம் கொண்டோர் பக்தி சிந்தனையுடன் ஒரே நேரத்தில் மூன்று கேள்விகள் மட்டும் கேட்டு அதற்குண்டான பலன்களையும் பரிகாரங்களையும் அறிந்து கொண்டு காகபுஜண்டரின் அருள்வழிகாட்டுதலின் படி வாழ்க்கையில் உயர்வடையலாம்.
https://www.facebook.com/groups/siddhar.science

நாடி சோதிடம் காண்ட விவரங்கள்


ஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் பதினெட்டு பகுதிகளைக்கொண்ட பதினெட்டு காண்டங்களைக்கொண்டதாகும். அது மட்டுமல்லாமல் சிறப்புக்காண்டமாக பிரசன்ன பிரச்சனை காண்டமும் உண்டு. நாம் இப்பொழுது காண்ட விவரங்களைக்காண்போம்.

1.பொதுக்காண்டம் (உதய காண்டம்)

ஒரு மனிதரின் பெருவிரல் ரேகையைக்கொண்டு அல்லது பிறப்பு விவரங்களைக்கொண்டு கீர்த்தி, புகழ், கௌரவம், வசதிகள், பல்வேறுவிதமான யோகங்கள் மற்றும் தெய்வீக வழிபாடுகள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய பொதுப்பலன்களை சுருக்கமாகச்சொல்லும் குருநூல் பொதுக்காண்டமாகும். பிறகாண்ட பலன்களை அறிந்து கொள்ள இந்த காண்டத்தை கட்டாயம் பார்த்து பலன்களை அறிந்து கொள்ள வேண்டும்

2.கல்வி மற்றும் குடும்ப காண்டம்

கல்வி நிலை, குடும்ப நிலை, வருமான வாய்ப்புகள், வாக்கு, செல்வம், தானம், கண், பல் மற்றும் ஆபரணச்சேர்க்கை முதலிய அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

3. சகோதர காண்டம்

வெற்றிகள், அக்கம்பக்கத்தவர்கள், சகோதரர் மற்றும் சகோதரிகள், அவர்களால் சாதகர் அடையும் நன்மை தீமைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

4. தாய்வழி சுகக்காண்டம்

தாயார், மனை, நிலம், சொத்து, சுகம், வாகனயோகம், எந்திர யோகம், புதையல், மகிழ்ச்சி, ஆபரணச்சேர்க்கை மற்றும் தெய்வீகச்சுகங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

5. புத்திரக்காண்டம்

குழந்தைகள், பூர்வ புண்ணியம், ராஜயோகம், தாய் மாமன் மற்றும் தர்மகர்ம சிந்தனைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.

6. சத்துரு காண்டம்

விரோதி, வியாதி, கடன், வழக்கு, பிரச்சனைகள், மனக்கலக்கம், சிறைதண்டனை, களவு, குற்றம், பொறாமை மற்றும் விபத்து போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

7. திருமண காண்டம்

திருமணவாழ்வு, எதிர்கால வாழ்க்கைத்துணைவரின் வரலாறு, வாழ்க்கைத்துணைவரின் பலன்கள் மற்றும் நட்பு போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

8. ஆயுள் காண்டம்

ஆயுள் காலம், கண்டம், விபத்து, மற்றும் மரணத்தின் தன்மைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.

9. பிதாபாக்கியக்காண்டம்

தந்தை, செல்வம், பணச்சேர்க்கை, பரிசு, தெய்வ தரிசனம், ஆலயம் கட்டுதல், குரு உபதேசம், முக்தி மார்க்கம், தெய்வீக மந்திரம், தெய்வீகப்பொருள், தர்மம், அறப்பணி, யாகம், ஓமம், தந்தைவழி மூதாதையர் சொத்துக்கள் மற்றும் திடீர் பொருள் வரவு போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

10. தொழிற்காண்டம்

தொழில், தொழில் வாய்ப்பு, வியாபாரம், தொழிலுயர்வு, நீண்ட பொருள் வரவு, கர்மம், சமூக சேவைகள் மற்றும் பொது வாழ்வு போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.

11. லாப காண்டம்

லாபம், இளைய களத்திரம் (இரண்டாம் திருமணம்), தகாத உடலுறவு இன்பங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.

12. விரைய காண்டம்

விரையம், அடுத்த பிறவி, மோட்சம், வெளிநாட்டுப்பிரயாணம், படுக்கை சுகம், ஆண்மைக்குறைவு மற்றும் உடலுறவு இன்பம் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

13. சாந்திக்காண்டம்

முற்பிறவியில் பிறந்த இடம், செய்த நன்மை தீமை, முற்பிறப்பில் செய்த பாவங்களால் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பம் மற்றும் துன்பத்தை நீக்குவதற்குண்டான தெய்வீக பரிகாரங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

14. தீட்சைக்காண்டம்

தெய்வீக ஆற்றலைப்பெறுவதற்குண்டான மந்திரமுறைகளையும்; எதிரிகளின் தொல்லைகளிலிருந்து மீண்டு வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காக உடலில் அணிந்து கொள்ள வேண்டிய தெய்வீக எந்திரங்கள் மற்றும் இல்லத்தில் வைத்து பூசை செய்யவேண்டிய சித்தர் குளிகைகள்(ரசமணிகள்) போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

15.ஒளடதக்காண்டம்

நோய்கள், நோய்களைத்தீர்க்கும் மூலிகை மருந்துகள், மருந்துகளை உட்கொள்ளும் விதங்கள், மற்றும் சித்தமருந்துகளை தயாரிக்கும் முறைகள் போன்றவைகளின் பலன்களைச்சொல்லும் குருநூல்.

16.திசாபுக்தி காண்டம்

நவகிரக திசைகள் மற்றும் புக்திகளின் காலங்களில் எற்படும் நன்மை தீமைகளின் பொதுப் பலன்களைச்சொல்லும் குருநூல்.

17.பொதுவாழ்வு (அரசியல்) காண்டம்

சமூகசேவை மற்றும் அரசியல் வாழ்க்கைப்பற்றிய பலன்களைச் சொல்லும் குருநூல்.

18. ஞான காண்டம்

யோக ஞான மார்க்கங்கள், முக்தி மார்க்கங்கள், தெய்வீக உபதேசங்கள், தெய்வீக தரிசனங்கள் மற்றும் தெய்வீக உதவிகள் பற்றிய பலன்களைச் சொல்லும் குருநூல்.

சிறப்புக்காண்டம்

19. பிரசன்ன பிரச்சனை காண்டம்

இக்காண்டத்தின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் பல்விதமான பிரச்சனைகளுக்கும், சந்தேகங்களுக்கும், கேள்விகள் மூலம் விடைகள் பெறலாம். ஒரு பிரசன்ன பிரச்சனை காண்டத்தில் அதிகபட்சம் மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கிடைக்கும்.
https://www.facebook.com/groups/siddhar.science